பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை 937 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அதனை தேசிய அவசர நிலையாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பல பகுதிகளில் வழக்கத்து மாறாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், 3 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். அந்நாட்டில் 23 மாவட்டங்கள் பேரிடரால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பஹ்ரைன் என்ற பகுதியில், அடுக்குமாடி கொண்ட வீடு ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி மற்றும் கார்கள் வெள்ள நீரில் மிதக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூன் 14ஆம் தேதி பருவ மழைக்காலம் தொடங்கியது முதல் பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்து வரும் மழையால் இதுவரை 343 குழந்தைகள் உள்பட 937 பேர் மழை, வெள்ளத்திற்கு பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக சிந்த் மாகாணத்தில் மட்டும் 306 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 8 லட்சம் கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுவரை மொத்தம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள், 130 பாலங்கள் சேதமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 கிலோ மீட்டர் சாலைகளும், 85 ஆயிரம் குடியிருப்புகளும் சேதமடைந்திருப்பதாக ராய்டர்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.