ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள், 10 பில்லியனைத் தாண்டி, டிஜிட்டல் இந்தியா திட்டம் புதிய சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற ஒராண்டுக்கு பிறகு 2015 ஜூலை முதல் தேதி ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை அறிவித்தார். மிகவும் விரிவாகவே இந்த அறிவிப்பு அமைந்திருந்தது. இந்தியாவை டிஜிட்டல் ஆற்றல் மிக்க தேசமாகவும், இந்திய சமூகத்தை அறிவுசார் சமூகமாகவும் உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இணைய வசதி, திறன் வளர்ச்சி, டிஜிட்டல் நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய திட்டமாக ‘டிஜிட்டல் இந்தியா’ முன்வைக்கப்பட்டது. மேட்டுக்குடியினருக்கு மட்டும் அல்லாமல், ஏழைகளுக்குமான ‘டிஜிட்டல் இந்தியா’வை உருவாக்குவதே நோக்கம் என பிரதமர் மோடி இத்திட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார். ‘ஒவ்வொரு குடிமகனும், வங்கி கணக்கை செல்போன் மூலம் இயக்குவது சாத்தியமாக வேண்டும், அரசுடன் தொடர்பு கொள்வது, தினசரி பணிகளை மேற்கொள்வதே இதன் நோக்கம்.
இந்தநிலையில், யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface – UPI) பரிவர்த்தனைகள், முதன்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியனைத் தாண்டியதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India – NPCI) தெரிவித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 30 வரை, 135 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் UPI மூலம் மொத்தம் 10.24 பில்லியன் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டுள்ளன.
NPCI இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “UPI வியக்கத்தக்க வகையில்10 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மூலம் சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த நம்பமுடியாத மைல்கலை எட்டிய சாதனையையும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் திறனையும் கொண்டாடுவதில் எங்களுடன் அனைவரும் இணையுங்கள் என கேட்டுக் கொள்கிறோம். இந்த வேகத்தைத் தொடர்ந்து கடைபிடித்து, UPI உடன் பரிவர்த்தனை செய்யும் விதத்தில் தொடர்ந்து புரட்சியை ஏற்படுத்துவோம்!,” முன்னதாக Twitter என அழைக்கப்பட்ட X தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, தனது X(ட்விட்டர்) பதிவில், ‘இது ஒரு சிறந்த செய்தி! இந்திய மக்கள் டிஜிட்டல் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அதே சமயம் இது அவர்களின் திறமைக்கு கிடைத்த மரியாதை என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாட்களிலும் இந்தப் போக்கு தொடரும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.