பிப்ரவரி மாதம் என்றாலே இளைஞர்களின் நினைவுக்கு வருவது வெலன்டைன்ஸ் டே (Valentine’s Day) என்ற காதல் தினம். அன்றைய தினம் தங்கள் இணையருடன் கொண்டாடுவதற்கு காதலர்கள் பல திட்டங்களை போட்டி தயாராவது வழக்கம். இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் அரசாங்கமே காதலர் தினத்தை கொண்டாட ஒரு விநோத ஏற்பாடை செய்திருக்கிறது. இது அந்நாட்டின் காதலர்களுக்கு காதலர் தின பரிசாக அமைந்துள்ளது. அதாவது, பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்து அரசு சுமார் 9.5 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அந்நாட்டில் பாலியல் சுகாதாரத்தை பேணும் நோக்கில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் ரசந்தா தனதிரேக் கூறுகையில், நாட்டில் உள்ள மருந்தகத்திலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து அளவு ஆணுறைகளையும் வழங்க இருக்கிறோம். விருப்பமில்லா கருத்தரிப்பு மற்றம் பாலியல் நோய் பரவலை தடுக்கவே அரசு இந்த முடிவெடுத்துள்ளது. இந்த இலவச ஆணுறைகள் லூப்ரிகேட்டிங் ஜெல்லுடன் விநியோகம் செய்யப்படும். இதை பெற விரும்புவோர் ஸ்மார்ட்போனில் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். அதில், எந்த இடத்தில் ஆணுறையை பெற்றுக்கொள்கிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளாகவே தாய்லாந்தில் பாலியல் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. syphilis and gonorrhoea ஆகிய பாலியல் நோய் பாதிப்பு 15 முதல் 19 வயதினர், மற்றும் 20 முதல் 24 வயதினரிடையே அதிகம் காணப்படுகிறது. இதை தடுக்கவே தாய்லாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.