விபத்துக்களில் வாகனங்களில் சிக்கிக்கொள்பவர்களின் உயிரை காக்கும் வகையில் ”வீரா” வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான வீரா என்ற (VEERA – Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.
சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் திட்டத்தின் ஒரு அங்கமாக, சாலை விபத்துக்களில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரைக் காப்பதற்கு, ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடியான முயற்சியாக மீட்பு வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது இந்தியாவிலேயே முதல்முறையாக திட்டமிடப்பட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலினால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது, சாலை விபத்தில் சிக்கிய, சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் பாதிக்கப்பட்ட நபர்களை, தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும். இந்த வாகனத்திற்கு வீரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது ஹூண்டாய் குளோவிஸ் மற்றும் இசுசூ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டமாகும். மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற்றும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு தங்களது நிபுணத்துவம் மற்றும் பங்களிப்பை அளித்துள்ளன.