நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கான வரிகளை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த புதிய வழிமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதையடுத்து, நாட்டில் எந்தெந்த பொருட்களுக்கான விலைகள் குறைய உள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அதன்படி, மத்திய பட்ஜெட்டில் செல்பொன் பேட்டரிகள் மற்றும் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் திறந்த செல்களின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்னணு சாதனங்கள், மொபைல் போன், எல்இடி, எல்சிடி வகை தொலைக்காட்சிகளின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும்.
மேலும், பட்ஜெட்டில் உயிர் காக்கும் மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மருந்துகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. மருத்துவ உபகரணங்கள், புற்றுநோய் உட்பட பல மருந்து பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகளுக்கான விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.