தமிழ்நாட்டில் மார்ச் 4ஆம் தேதியான நாளை 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி அவதார நாளன்று தலைமைப்பதிக்கு பெருந்திரளாக மக்கள் வருகை தருவார்கள். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளைய தினம் மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதற்கு இடையூறு ஏற்படாத வகையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 15.03.2025 (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோயில் திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், மார்ச் 4ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்வதற்காக மார்ச் 15ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.