நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் என்று பல அரசியல் தலைவர்கள் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் தான், இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தொகுதி மறுசீரமைப்பிற்கான காலவரையறை 2026ஆம் ஆண்டில் முடிகிறது. அப்போது நாடாளுமன்றம் எந்தளவுக்கு அதிகரிக்கப் போகிறது என்றும் எவ்வளவு சீட் அதிகரிக்கும் என்பதையும் மக்களிடம் நாங்களே சொல்வோம். அதில் ஏதேனும் தவறு இருக்கும்பட்சத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தலம்.
மேலும் இன்று எவ்வளவு இருக்கிறதோ, அதே தான் நாளையும் இருக்கும். தொகுதிகள் அதிகரிக்கப்பட்டாலும் குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்கிறோம். ஆனால், இதையெல்லாம் கேட்காமல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகின்றன. இது தேவை தானா..? அதேபோல், ஷூட்டிங் ஸ்பாட்ல யாரோ எழுதிக்கொடுத்ததை விஜய் படிச்சிட்டு இருக்காரு. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பங்கேற்றவருக்கு நாடாளுமன்றத்தில் 543 தொகுதிகள் இருப்பதே தெரியவில்லை. அவர் ஏதோ நம்பரைச் சொல்கிறார். பின்னர், செய்தியாளர்கள் தவறை சுட்டிக்காட்டியதும் தான் மாற்றிப் படித்தார். இன்னொரு தலைவர் 453 தொகுதிகள் என பேசியே முடித்துவிட்டார்.
இப்படித்தான், அனைத்துக் கட்சி கூட்டம் இருந்தது. இந்தியாவில் எத்தனை எம்பி இடங்கள் இருக்கிறது என்றே சில தலைவர்களுக்குத் தெரியவில்லை. அன்று அவர்கள் பேசியது ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவில் 543 தொகுதிகள் இருக்கிறது. இது கூட தெரியாமல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்து வடை, பச்சி, போண்டா சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு பிரதமரையும், பாஜகவையும் திட்டிவிட்டுக் கிளம்பியுள்ளனர்” எனக் கடுமையாக சாடினார்.