விதிமீறல்கள் காரணமாக இந்தியாவில் மே மாதம் மட்டும் 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கிட்டத்தப்பட்ட 500 மில்லியன் வாட்ஸ் அப் பயனாளர்கள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புதிய வசதிகளையும் செய்யவும் அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கியூ ஆர் கோட் கொண்டு வாட்ஸ் அப் செயலியின் மூலமாகவே புதிய சாதனத்திற்கு சாட் ஹிஸ்டரியை பரிமாறிக் கொள்ளும் புதிய வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் பயனாளர்களின் புகார்கள் அடிப்படையில், ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த அறிக்கையை, அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் வெளியிடுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 75 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது. இந்த நிலையில், மே மாதம் மட்டும் இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கியிருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்திய சட்ட விதிமீறல் மற்றும் வாட்ஸ் அப் விதிமுறைகளின் விதிமீறல் ஆகிய காரணங்களுக்காக 65 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.