ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக புகார் மனு அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில், பெண்களுக்கான உரிமைத் தொகை 1,000 ரூபாய் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த இன்புதுரை தேர்தல் அலுவலர் சிவக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, “தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளோம். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையருக்கும் புகார் மனுவை அனுப்பி உள்ளோம்.
அதிமுக சார்பாக இதுவரை 12-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த புகாருக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை முதல்வர் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப் போகிறோம் என்று சொல்லி இருந்தேன் என குறிப்பிட்டால், அது மக்களை ஏமாற்றும் மோசடி. தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய இந்த பேச்சு எல்லா தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பானது. ஆகவே, முதல்வர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.