இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே சர்ச்சைக்கு குறைவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிவேக விரைவு ரயிலாக இருக்கக் கூடிய இந்த ரயில், கால்நடைகள் குறுக்கிட்டு பழுதாவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே இந்த ரயில் 7 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், எட்டாவதாக செகந்திராபாத் முதல் விசாகப்பட்டினம் வரையிலான வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்குவதற்கான சேவையை கடந்த ஜனவரி 15ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
அதன்படி, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத்துக்கு இயக்கப்பட்ட ரயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட காலை உணவின் தரம் மிக மோசமாக இருந்ததாக பயணி ஒருவர் ட்விட்டரில் வீடியோவோடு பகிர்ந்துள்ளார். அதில், கொடுக்கப்பட்ட காலை உணவில் இருந்த வடையில் அந்த பயணி எண்ணெய்யை பிழிவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. மேலும், “ரயிலில் பயணிகள் காலை உணவு சாப்பிடுவதற்கு அஞ்சுகிறார்கள். தரமற்ற உணவை விநியோகிக்கிறார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே பதிவில் சில ரயில் பயணிகள் ரயில்களின் மோசமான நிலை குறித்த வீடியோக்களையும் பகிர்ந்து ரயில்வே துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுகளெல்லாம் வைரலாகவே, இந்தியன் ரயில்வேயின் ரயில்சேவா ட்விட்டர் பக்கத்திலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் ரயில்வே துறையின் இணையதளத்தில் அல்லது 139 என்ற எண்ணை அழைத்து புகார்களை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல, வந்தே பாரத் ரயில் தரமற்ற உணவு வழக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டதாகவும் IRCTC சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.