திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020 டிசம்பர் மாதம் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திடீர் திருப்பமாக சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும், விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டும், விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று தந்தை காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கிலேயே சித்ராவின் கணவர் ஹேம்நாத் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும், 2021இல் இருந்தே இந்த வழக்கு, குற்றச்சாட்டை பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் தந்தை காமராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதுமை காரணமாக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக உள்ளது.
இந்த வழக்கில் சாட்சியாக இருக்கக் கூடியவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்றனர். இதனால், சித்ராவின் மரண வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டுமென காமராஜ் கூறியுள்ளார். இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.