வரைப்பட அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோரிடமிருந்து, மின் கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரியை 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் விதிமுறையை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், அறியாமையால் தவறு செய்தவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்கலாம் என்றும், அரசையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றும் நோக்கத்துடன், வரைப்பட அனுமதியை மீறி கட்டடம் காட்டியவருக்கு சட்டம் வளைந்து கொடுக்காது என்று கூறினார்.
வரைப்பட அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோரிடமிருந்து, மின் கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரியை 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படவேண்டும், அப்படி வசூலிக்கும்போது தவறு செய்வதற்கு முன் இருமுறை யோசிப்பார்கள் எனக்கூறிய நீதிபதிகள், ஆரம்ப நிலையிலையே விதிமீறல்களை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
மேலும் இப்படி விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பை துண்டித்து, வரைபட அனுமதி அடிப்படையில் குறைபாடுகளை சரி செய்யம் வரை கட்டடத்தை பயன்படுத்த தடை வித்திக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் விதிமுறையை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட மனுதாரருக்கு ரூ.2லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மனுவை தள்ளுபடியும் செய்தது. மேலும் இந்த அபாரதத் தொகையை 4 அறக்கட்டளைகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.