பரத் நடிப்பில் வெளியான ‘காதல்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுகுமார். இப்படத்தை தொடர்ந்து காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என படங்களை இயக்கியுள்ளார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், சிறிய பட்ஜெட்டில் படங்கள் தயாரித்து இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், தன்னை காதல் சுகுமார் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, என்னிடம் இருந்து நகை, பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக நடிகை ஒருவர் புகாரளித்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அவர், ஒரு சில படங்களை துணை நடிகையாக நடித்துள்ளார். இவர், ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்த நிலையில் குழந்தையுடன் வசித்து வருகிறார். நடிகைக்கும், சுகுமாருக்கு கடந்த 3 ஆண்டுகளாகவே பழகி வந்துள்ளனர்.
நடிகையை காதலிப்பதாக கூறி அவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். மேலும், அடிக்கடி அந்த நடிகையிடம் இருந்து நகை, பணத்தை சுகுமார் வாங்கி வந்துள்ளார். இதற்கிடையே, சில நாட்களாக நடிகையுடன் பேசுவதை சுகுமார் நிறுத்திய நிலையில், அவருடைய செல்போன் நம்பரையும் பிளாக் செய்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, நகை – பணத்தை பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றியது ஏன் என கேட்டபோது, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தன்னுடன் பொய்யாக பழகியதோடு நகை, பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்து விட்டதாக சுகுமார் மீது கடந்த ஜனவரி மாதம் அந்த நடிகை புகாரளித்துள்ளார். இந்நிலையில், புகார் கொடுத்து 3 மாதங்களுக்கு பிறகு சுகுமார் மீது சென்னை மாம்பழம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், காதல் சுகுமாரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.