ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் முதல்வர் அசோக் கெலாட் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை அடுத்து ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முதல்வர் அசோக் கெலாட் ஜுன்ஜுனுவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இரண்டு முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதில், “கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் பல தவணைகளாக வழங்கப்படும் என்றும், 1.05 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடனே நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புகள் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.