மத்தியப்பிரதேச மாநிலம் மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரின் மனைவி பாவனா. இந்நிலையில், கணவன்-மனைவி இடையே, மனைவி எப்போதும் செல்போனில் பேசுவது குறித்து அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டிலிருக்கும் பெண் சுனிலிடம் வந்து, நீங்கள் சென்ற பிறகு உங்கள் மனைவி என் கணவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் கண்டியுங்கள் என்று கூறியுள்ளார்.
இது குறித்து மனைவியிடம் சுனில் விசாரித்த போது, நான் பேசவில்லை என்று மறுத்துள்ளார். அதன் பிறகு மற்றொரு நாள் வேலை முடிந்து சுனில் வீட்டிற்கு வந்த போது, பக்கத்து வீட்டு இளைஞரிடம் தனது மனைவி பாவனா செல்போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். சுனில் வீட்டிற்கு வந்த பின்னரும், இவர்களது பேச்சு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பின்னர், தனது மனைவியிடம், அந்த இளைஞனிடம் இப்படி செல்போனில் பேசக்கூடாது என எச்சரித்தார். ஆனால், பாவனா கேட்கவில்லை. இதனால் மிகவும் வெறுப்படைந்த சுனில் பாவனாவின் செல்போனை பிடுங்கி எடுத்து வைத்துக் கொண்டார்.
இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் கணவர் சுனில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, பாவனா எழுந்து கிச்சனுக்கு சென்று சமையல் எண்ணெய்யை சூடாக்கினார். பின்னர் சூடான எண்ணெய்யை கொண்டு வந்து கணவரின் அந்தரங்க பகுதியில் ஊற்றியுள்ளார். இதில் அந்த பகுதி 70 சதவீதம் தீக்காயமடைந்துள்ளது. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி விட்டு, மனைவி பாவனா வீட்டை விட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து, சுனிலின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கணவரின் வாக்குமூலத்தின் பேரில் மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள மனைவி பாவனாவை போலீசார் தேடி வருகின்றனர்.