தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில், நேற்றைய தினம் அவரது மகன் மஞ்சு மனோஜ் சிலருடன் நுழைய முயன்றபோது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மோகன் பாபுவின் பவுன்சர்கள், தனிப்படை போலீசார் ஆகியோர் செய்தியாளர்களை விரட்டியடித்தனர். மேலும், நடிகர் மோகன் பாபு சில செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி தாக்கிய வீடியோவும் வைரலானது.
இதில் காயமடைந்த 2 ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தெலுங்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களை தாக்கியது தொடர்பாக மோகன் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் மோகன் பாபு உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தந்தை தன்னை தாக்கியதாக மகனும், மகன் தன்னை தாக்கியதாக தந்தையும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து பரபரப்பு கிளப்பியுள்ளனர்.