நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று அவர் ஆஜராகவில்லை. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்த நிலையில், அவர் மீது இரு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி தான் ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தொண்டை பிரச்சனை காரணமாக பேச முடியாததால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நாளை ஆஜராவதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தனது வாய்ஸ் மெசேஜில் தனக்கு வேண்டாதவர்கள் தான் தலைமறைவாகிவிட்டதாக சந்தோஷ செய்தியை பரப்புவதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் எத்தனை பிரச்சனைகள் இருக்கிறது, இதையெல்லாம் விட்டுவிட்டு கைக்கூலிகள் மூலம் இந்த தவறான தகவல் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். தான் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தான் என்ன நிஜமாகவே யாரையாவது கற்பழித்து விட்டேனா அல்லது கொலை செய்துவிட்டேனா என்றும் அவரது ஸ்டைலில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வாய்ஸ் மெசேஜ் மூலம் அவர் விசாரணைக்கு நாளைய தினம் ஆஜராகவுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளார்.