சொமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
ஒரே உணவு எண்ணற்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது என்ற தனிப்பெருமை பிரியாணிக்கு மட்டுமே உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஏன் ஒவ்வொரு ஊருக்கும் அதன் சொந்த சிறப்புமிக்க பிரியாணி உள்ளது. லக்னோவி பிரியாணி, முகலாய் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தூத் கி பிரியாணி, மோட்டி பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, சிந்தி பிரியாணி, மெமோனி பிரியாணி, மலபார் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி மற்றும் பல வகைகள் உள்ளன. வளமான உணவு பாரம்பரியத்தை கொண்டுள்ள நம் நாட்டில் மாநிலத்திற்கு மாநிலம் உணவு வகைகள் வேறுபட்டாலும், பெரும்பான்மையான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக இருக்கிறது பிரியாணி.
தேசிய அளவில் விரும்பப்படும் சுவையான உணவாக இருப்பது பிரியாணி. சைவம் அல்லது அசைவம் என இரண்டு பிரிவினருக்குமே ஏற்ற வகையில் மிகவும் ருசியாக தயாரிக்கப்படும் பிரியாணியின் சுவைக்கு நம்மில் பெருமான்மையான மக்கள் அடிமையாக இருக்கிறோம்.
சொமேட்டோ சமீபத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் அங்கு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 186 பிரியாணி ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் டெல்லியை சேர்ந்த அங்கூர் என்பவர் இந்த ஆண்டு 3,330 பிரியாணி ஆர்டர்களை கொடுத்துள்ளார் எனவும் சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கியும் இந்தாண்டில் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.