கொரோனா தடுப்பூசியில் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவியது. அதன் பிறகு உலக நாடுகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. கொரோனாவின் தோற்றம் குறித்து இதுவரை எந்தவொரு தெளிவாகத் தகவலும் இல்லை என்ற போதிலும், அதன் பாதிப்பு உலகெங்கும் எதிரொலித்தது. அனைத்து தரப்பினரும் இதனால் சில ஆண்டுகள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
நாம் இந்தளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்ப கொரோனா தடுப்பூசிகள் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெகு சீக்கிரம் தடுப்பூசி உருவாக்கப்பட்டு, அது மக்களுக்குச் செலுத்தப்பட்டதே கொரோனா கட்டுக்குள் வரக் காரணம் எனப்படுகிறது. அதில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி மிக முக்கியமானது. அவர்கள் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசியை உருவாக்கினர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த பைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சில காரணங்களால் பைசர் தடுப்பூசியை இந்தியா வாங்கவில்லை. இது தொடர்பாக இப்போது ஹெல்த் கனடா சில பரபர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை ஃபைசரின் கொரோனா தடுப்பூசியில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
பைசர் கொரோனா தடுப்பூசி உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும், இது தொடர்பாக ஃபைசர் முன்கூட்டியே எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது குறித்து ஹெல்த் கனடா அமைப்பு அங்குள்ள உள்ளூர் ஊடகங்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “பிளாஸ்மிட்டிற்குள் (SV40) உயிரியல் டிஎன்ஏ வரிசைகளை இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஸ்பான்சர்களை எதிர்பார்க்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
கனடா நேரடியாகப் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 டிஎன்ஏ அதில் இருக்கிறது எனக் கூறவில்லை என்றாலும் அதற்கான ஆய்வுகளைச் செய்கிறது என மட்டும் அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த கேன்சர் வைரஸ் இருப்பு புகார் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்த செய்தி வெளியான உடன் இது குறித்து ஆய்வாளர்கள் பல வித கருத்துகளைக் கூறி வருகின்றனர். ஒரு தரப்பினர் இந்த டிஎன்ஏ கேன்சரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகக் கூறுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார்கள்.