திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவியை மருமகளாக கூறி, தனது மகனிடம் பேச சொல்லி தொல்லை கொடுத்த ஆசிரியையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணிதப்பாட முதுநிலை ஆசிரியையாக சாந்தி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என அழைக்கும் இவர், தனது மகனிடம் செல்போனில் பேசுமாறும் கட்டாயப்படுத்தி உள்ளார்.

மேலும், இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாடம் சம்பந்தமாக பேச வேண்டும் என்று கூறுவதுடன், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களையும் பேசியுள்ளார். இவரின் அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம் தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். மேலும், மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என்று வன்மத்தை விதைத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் புகார் அளித்தனர்.

மாணவிகள் மட்டுமின்றி அவரால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர்களும் சாந்தி பிரியா மீது மாவட்ட உயர் கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட கல்வி அதிகாரி விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசிரியை சாந்திப்பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக பூலாங்கிணறு அரசுப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.