திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள், பெண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.. எனினும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கு பெண் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என்றும், அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ அல்லது இழிவாகவோ அல்லது ஏளனமாகவோ பேசக்கூடாது என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி இருந்தது..
இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ ஒன்று வைரலானது.. அந்த வீடியோவில் பெண்கள் மத்தியில் பேசும் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க’ என்று கூறியிருந்தார்.. அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன..
இந்நிலையில் பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.. அதில் பேசும் பெண் ஒருவர், நடத்துனர் தங்களை நாயை விட கேவலமாக நடத்துவதாகவும், எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இதே நிலை தான் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்.. மேலும் தங்களுக்கு இலவச பேருந்து பயணமே வேண்டாம் என்றும் வீடியோவில் பேசும் பெண் கூறுகிறார்..
இந்த வீடியோவை பகிர்ந்து, “ அமைச்சரே மக்களை கேவலமாக நடத்தும் போது நடத்துநர் அதைதானே பின்பற்றுவார்…” என்று நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்.. அவரின் இந்த ட்வீட்டுக்கு ஹெச். ராஜா விடியாத ஆட்சி என்று பதிலளித்துள்ளார்.. அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர்..