இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், பல துறை அமைச்சகங்கள், துறைகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள் மற்றும் தொழில் துறையினர் ஆகியோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்து வருகிறது.இந்தநிலையில், டெல்லியில் இருக்கும் விக்யான் பவனில் நேற்று, பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டு, சர்வதேச தொலைத்தொடர்பு பகுதி அலுவலகம், 6ஜி ஆராய்ச்சி மேம்பாடு சோதனை அமைப்பு மற்றும் புத்தாக்க மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, 5ஜி தொழில்நுபட்பத்தை அதிவேகமாக அறிமுகப்படுத்தியுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 5ஜி அறிமுகமான 120 நாட்களிலேயே சுமார் 125 நகரங்களுக்கு இந்த சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.4ஜி தொழில்நுட்பத்திற்கு முன்னர், தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடாக மட்டுமே இருந்த இந்தியா, இப்போது தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்தியா 100 5ஜி ஆய்வகங்களை அமைக்கும்.
மேலும், நகரத்தை விடவும் கிராமங்களில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 5ஜி அறிமுகமான சில நாட்களிலேயே 6ஜி குறித்து நாங்கள் பேசி வருகிறோம். இது இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.