தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 12ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. மேலும், பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி தமிழ்நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டத்தொடருக்கான புதிய உத்தரவை, அரசு கேட்டுக் கொண்ட தேதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பிப்பார். இதற்கிடையே, வரும் 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் பட்ஜெட் உரையை சட்டசபையில் வாசிக்க இருக்கிறார்.
பொது பட்ஜெட்டை தொடர்ந்து 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.