ஆசைக்கு இணங்க மறுத்தால் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகாரளித்துள்ளார்.
பார்த்த உடனே காதல், அடுத்த நிமிடமே ஊர் சுற்றுதல் என நவீன கால காதலாக மாறிவிட்டது. ஆசை தீர உல்லாசமாக இருந்துவிட்டு, பிரேக் அப் செய்யும் நவீன காதலாகிவிட்டது. இப்படிப்பட்ட காதலால் இளம்பெண் ஒருவர் தனது வாழ்க்கையை இழந்து ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறுகையில், ”கோவை மாநகர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்தாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பல இடங்களுக்கு விக்னேஷ் தன்னை அழைத்து சென்றதாக கூறியுள்ளார். மேலும், பல இடங்களுக்கு ஊர் சுற்றியபோது ஓட்டல்களில் தனிமையில் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் உடன் உல்லாசமாக இருந்ததில், தனக்கு குழந்தை உண்டாகி 3 மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அப்போது விக்னேஷின் பெற்றோர் தன்னை அழைத்து கர்ப்பத்தை கலைத்து விட்டால், விக்னேஷை திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியதாகவும், இதனால், கர்ப்பத்தை கலைத்து விட்ட நிலையில், விக்னேஷின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்து விட்டதாகவும் அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புகார் அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவை சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுக்கிறார்கள். இதனால் தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். அதில், விக்னேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தன்னை மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுவதாகவும், இல்லாவிட்டால் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டி வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். எனவே, தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் சினேகா வலியுறுத்தியுள்ளார்.