சர்வதேச நிகழ்வுகளில் நாட்டைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் ஆரம்பத்திலேயே இடம்பெறாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட விளம்பரங்களில் ஆரம்பத்திலேயே பிரதமர் மோடியின் படத்தை சேர்க்காதது ஏன் எனக் கேட்டு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் முன்னிலைப் படுத்தப்படுவதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ”சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்திற்காக பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய இந்த நிகழ்வினை ஆளும் கட்சி தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதலமைச்சரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள ராஜேஷ் குமார், இது சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார். ஆகவே, 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்” என ராஜேஷ்குமார் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் அணில் காணொலி வழியாக ஆஜராகினார். ‘பிரதமர், குடியரசுத் தலைவர் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு தமிழக அரசுத்தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசுத் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரதமர் வருகை 22ஆம் தேதிதான் உறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்து பிரதமரின் படம் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் சேர்க்கப்பட்டு, இன்றைய நாளிதழ்களில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ‘குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்’ என கூறினர். ‘முதலில் இது நமது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. தேசம் குடியரசுத்தலைவர், பிரதமரின் கீழ் நிர்வகிக்கப்படும் சூழலில், இதுபோன்ற சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும்’ என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.