புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 20). இவர், Pondicherry College Call Girls என்ற டெலகிராம் குழுவை உருவாக்கி அழகிய இளம் பெண்களின புகைப்படம், பெயர், மேற்கண்ட பெண்ணை முன்பதிவு செய்ய எவ்வளவு பணம் வேண்டும் என்ற விவரங்களை டெலிகிராம் குழுவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து இளைஞர்கள் அந்த நபரை டெலிகிராமில் தொடர்பு கொள்கிறார்கள். அரவிந்தனுடைய பெயரோ, புகைப்படமோ, செல் நம்பரோ, வங்கி கணக்கோ யாரும் தெரிந்து கொள்ளாத படி அவர் தனது சமூக வலைதள கணக்கை உருவாக்கி உள்ளார்.

தொடர்பு கொள்ளும் நபரை நான் அனுப்புகின்ற லிங்கை பயன்படுத்தி UPI ID மூலமாக பணத்தை எனக்கு அனுப்புங்கள். நீங்கள் பணத்தை செலுத்தியவுடன், உங்களுக்கு எந்த பெண் வேண்டுமோ அதை நீங்கள் சொல்லும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்று அந்த குழுவில் பதில் கூறுவார். இதனை நம்பி பணத்தை அனுப்பியவுடன் பணம் அனுப்பிய நபரை டெலிகிராமில் பிளாக் செய்து விடுவார். மேலும் பணம் அனுப்பிய விவரம், பணம் எங்கு சேர்ந்தது, தொலைபேசி எண்கள் போன்ற எந்த விவரமும் தெரியாததால் பணத்தை இழந்தவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற விவரம் அப்போதுதான் தெரிய வரும். ஏமாற்றப்பட்ட சம்பவத்தை காவல்துறையில் சென்று புகாராக கொடுத்தால் நம் மீது ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில் பணத்தை இழந்தவர்கள் யாரும் போலீசில் புகார் கொடுப்பதில்லை.
இந்நிலையில், அதே குழுவில் பகிரப்பட்ட இளம் பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது உடன் பிறந்த அண்ணன் பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், மோசடி நபரை கைது செய்து அவர் உபயோகப்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதியின் உத்தரவுபடி அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோன்று இளைஞர்களை ஏமாற்றும் வேலைகள் எந்தெந்த சமூக வலைதள குழுக்களில் நடந்து வருகிறது? இளைஞர்கள் இதுபோன்ற நபர்களை தொடர்பு கொண்டு பணத்தை இழக்க வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், இளைஞர்களை எச்சரித்துள்ளனர்.