மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மின்சாரத்துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”பல மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் வைத்துள்ளதாகக் கூறினார். சில மாநில அரசுகள் தாங்கள் வழங்கும் மின்சார மானியத் தொகையைக் கூட மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதனால், பல லட்சம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
![மின்கட்டணத்தை மக்கள் நேர்மையாக செலுத்தும்போது அரசுகள் ஏன் நிலுவைத் தொகையை செலுத்துவதில்லை? - பிரதமர் மோடி](https://1newsnation.com/wp-content/uploads/2022/01/pm_modi_pib_1200_0-sixteen_nine-2-1024x576.jpg)
நமது மக்கள் தங்கள் மின்கட்டணத்தை நேர்மையாக செலுத்தி வரும்போது, அரசுகள் ஏன் இவ்வாறு நிலுவைத் தொகைகளை வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், இந்த நிலுவைத் தொகைகளை மாநில அரசுகள் எவ்வளவு விரைவாக செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மின்சாரத்தை விநியோகிப்பதில் ஏற்படும் இழப்புகள் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக தெரிவித்த பிரதமர், வளர்ந்த நாடுகளில் இந்த இழப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இழப்பு அதிகமாக இருப்பதால், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.