காதலிக்கு பரிசு வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஆடு திருடனாக மாறிய கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு மலையரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் குமார் (20). இவரது நண்பர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் (20). இவர்கள் இருவரும் அப்பகுதியில் ரேணுகா என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடு ஒன்றினை இருசக்கர வாகனத்தில் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். இதனைப் பார்த்து ஆட்டின் உரிமையாளர் ரேணுகா கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆடு திருடிய இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர், இருவருக்கும் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரவிந்த்குமார் காதலர் தினத்தை கொண்டாடவும், தனது காதலிக்கு பரிசு வாங்குவதற்கும் பணம் இல்லாததால் ஆடு திருடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆடு திருடுவதற்கு துணையாக அவரது நண்பர் மோகன் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஆடு திருடப் பயன்படுத்திய பல்சர் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.