கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள குட்டிகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம் (32). இவர் தனது மனைவி, இரு குழந்தைகள் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று சிவராமின் வீட்டில் சிக்கன் உணவு சமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உணவை சிவராமின் தந்தை ஷீனா விரும்பி முழுவதுமாக சாப்பிட்டுள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய சிவராம் சாப்பிட நினைத்த போது, வீட்டில் சிக்கன் இல்லை என்றதும் கோபமடைந்தார். இதனால் சிவராம், தனது தந்தை ஷீனாவுடன் தகராறு செய்துள்ளார். அப்போது மகன் சிவராம் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சிக்கன் தொடர்பாக தந்தையுடன் மகன் சிவராம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இது பெரும் சண்டையாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தனது மகன் சிவராமை தந்தை ஷீனா மரக்கட்டையால் அடித்து தாக்கத் தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் சிவராம் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிவராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தந்தை ஷீனாவை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.