ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் சம்பாய் சோரன் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில், நில சுரங்க முறைகேடு வழக்கில் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கசிந்தபோதே, கட்சிக்குள் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும், பலதரப்பட்ட குழப்பங்களும் ஏற்பட்டது. அப்போது பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருந்த ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சம்பாய் சோரன் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தொடர்ந்து, பிப்.2ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக 67 வயதான சம்பாய் சோரன் பதவியேற்றார். பின்னர் முதலமைச்சர் சம்பாய் சோரன் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், அவரது ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இதற்காக ஜேஎம்எம் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ராஞ்சி அழைத்து வரப்பட்டனர். எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தை தவிர்க்க ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது ஜார்க்கண்ட் திரும்பியுள்ளனர்.