டெல்லியில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த, சவுமியா விஸ்வநாதன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வசந்த் கன்ஜ் பகுதியில் காரில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர். தடயங்களின் அடிப்படையில் இந்த கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதாவது, 2009ஆம் ஆண்டில் ரவி கபூர், அமித் சுக்லா, அஜய் குமார், பல்ஜீத் மாலிக், அஜய் செதி ஆகிய 5 பேர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு டெல்லியின் சாகெட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கைதன 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.