பொதுவாக குழந்தைகள் தங்களின் கைகளில் என்ன கிடைத்தாலும் அதை உடனே எப்படி வாயில் போட்டு முழுங்குவது என நினைப்பார்கள். இதனால் பெற்றோர்கள் ஓரிரு நிமிடம் கூட தங்களின் கண்களை மூட முடியாது. ஆனால் இங்கு ஒரு பெண் செய்த காரியம் இதற்க்கு குழந்தைகளே பரவாயில்லை என்று நினைக்க வைக்கிறது. ஆம், டானா பார்கர் செய்த காரியம் பலரை ஆச்சர்யத்தில் மூழ்க செய்துள்ளது.
சம்பவத்தன்று, டானா வழக்கம் போல் காலையில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, கேத்லீன் என்ற அவரது தோழியை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளார். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த டானா, தனது தோழியுடன் பேசிக்கொண்டே இருந்துள்ளார். ஒரு சில மணி நேரம் பிறகு தான் அவர் வைட்டமின் மாத்திரைகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நினைவு வந்துள்ளது. இதனால் அவர் உடனடியாக மாத்திரைகளை போட்டு தண்ணீர் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது தோழி விடைபெற்றுச் சென்றுள்ளார். பின்னர் டானா மீண்டும் வாக்கிங் சென்றுள்ளார். நடக்கும்போது பாடல்களை கேட்கும் பழக்கம் கொண்ட அவர், தனது ஏர்பாட்களை தேடியுள்ளார். ஆனால் அவரது ஏர்பாட்களை காணவில்லை.
அவர் ஏர்பாடை தேடும் போது தான், அவர் போட்டுக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் தனது கையில் இருப்பதை கவனித்துள்ளார். அப்போது தான், மாத்திரைக்குப் பதிலாக தனது கையில் இருந்த ஏர்பாடை அவர் முழுங்கியதை உணர்ந்துள்ளார். இதனால் பதறிப்போன டானா, தனது மருத்துவ நண்பர்களை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். மேலும், தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது மருத்துவ நண்பர்கள் அனைவரும், எதுவும் செய்ய வேண்டாம், ஏர்பாடு தானாகவே கழிவில் வெளியேறிவிடும் என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறியது போன்று மூன்று நாட்கள் கழித்து தனாகவே ஏர்பார்டு வெளியேறியுள்ளது. இந்த தகவலை அவரே வீடியோவாக டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளார்.