கொடைக்கானல் ஹோட்டல் அசோசியேசன் தலைவராக இருப்பவர் அப்துல்கனி ராஜா. இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் ஷாலியா, ரோசன் என்று இரு தங்கும் விடுதிகளை பல ஆண்டுகளாக சொந்தமாக நடத்தி வருகிறார். இவரது விடுதிக்கு 7ஆம் தேதி சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற வழக்கறிஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் அறை எடுத்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று வழக்கறிஞர் தனது மகளுடன் வெளியே சுற்றிபார்க்க சென்ற நிலையில், உடல் சோர்வு காரணமாக அவரது மனைவி மட்டும் ஓட்டல் அறையில் தனியாக இருந்துள்ளார். அவர் இருந்த அறையில் Wi-fi இணைப்பு செயல்படவில்லை என விடுதியின் உரிமையாளரான அப்துல் கனி ராஜாவுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் பெண்மணி தங்கியிருந்த அறைக்கு வந்த அப்துல்கனி ராஜா, தனியாக இருந்த அந்தப்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் போராடிய அந்தப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் அப்துல் கனி ராஜா அறையிலிருந்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தனது கணவருக்கு அந்த பெண்மணி தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுற்றுலாவை பாதியில் கைவிட்டு தங்கும் விடுதிக்கு திரும்பிய அந்த பெண்ணின் கணவர், தனது அறையை காலி செய்து விட்டு உடனடியாக தனது மனைவியுடன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தங்கும் விடுதிக்கு சென்று அப்துல்கனி ராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, அம்புதுல்கனி ராஜா மீது 354(A), 376, 511 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இவரது கைதுக்கு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலைய வாசலில் குவிந்தனர். அவரை அழைத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். காவல்நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டதாக கூறி அப்துல் கனி ராஜாவை கொடைக்கான ல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து காவலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.