கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், உரிமைத்தொகை ஒரு கோடி பேருக்கு தான் என்ற எந்தவித இலக்கும் கிடையாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு கடந்த 15ஆம் தேதியன்று அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.
இதனை சரி செய்து அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. மகளிர் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெண்கள் பலரும் இ-சேவை மையத்தில் குவிந்து வருகின்றனர்.
மேலும் விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://kmut.tn.gov.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடி பேருக்கு தான் என்ற எந்தவித இலக்கும் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் தகுதி இருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். தகுதி இருப்பவர்கள் அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.