உலகக்கோப்பை தொடரில் ஆப்கனுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் போட்டியை மாற்ற பாகிஸ்தான் அணி கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
50 ஓவர் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இதற்காக தயாராகி வருகின்றனர். மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளும் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் PTI இடம் இது குறித்து, சென்னையில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை தவிர்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாக். கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் இது குறித்து, ஆப்கனுக்கு எதிரான போட்டியை பெங்களூருவிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை சென்னையிலும் மாற்ற கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ தரப்பு வட்டாரம் PTI இடம் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC), போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து, பாதுகாப்பு காரணங்களுக்காக உலகக்கோப்பையில் விளையாடும் அனைத்து நாடுகளின் வாரியங்களிடமும் அவர்களது கருத்துகளை கேட்பது வழக்கம்.
மேலும் கடந்த 2016 இல் டி-20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் போது பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் நடைபெறும் போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மைதானத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது பாகிஸ்தான் அணியிடம் வலிமையான காரணம் இல்லாமல் மாற்ற சொன்னால் அதற்கு வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தரப்பு வட்டாரம் PTI இடம் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே இந்திய அணி, பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடருக்கு செல்லாது என்று திட்டவட்டமாகக் கூறியதால், ஹைபிரிட் மாடல் முறையில் ஆசியக்கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தானிலும், இலங்கையிலும் ஆசியக்கோப்பை நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தான் அணிக்கு வேறு மைதானம் மாற்றவேண்டும் என பாக். குழு வலியுறுத்தியதைப்போல், இம்முறையும் வலியுறுத்தலாம். உங்கள் அணியின் பலம் மற்றும் பலவீனங்களுக்கு ஏற்ப மைதானம் வேண்டும் என கேட்க தொடங்கினால், அது ஐசிசிக்கான போட்டி அட்டவணையை இறுதி செய்வது கடினமாகிவிடும். எனவே போதுமான வலுவான காரணம் இல்லாவிட்டால், இடங்களைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படாது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் விருப்பம் நிறைவேறுவது ஐசிசி மற்றும் பிசிசிஐ வசம் தான் உள்ளது, அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.