டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2009-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இதேபோல் 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 3-வது முறையாக இறுதிபோட்டிக்குள் நுழைந்துள்ளது.
![உச்சகட்ட பரபரப்பில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி..!! பாகிஸ்தான் - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/Pak-vs-eng-1-e1668309368211.jpg)
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அரையிறுதியில் பலம் வாய்ந்த இந்திய அணியை எளிதாக தோற்கடித்தது. அரையிறுதியில் இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை இங்கிலாந்து அணி 16 ஓவரில் இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் (80 ரன்கள்), அலெக்ஸ் ஹாலெஸ் (84 ரன்கள்) ஆகியோர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 170 ரன்கள் திரட்டி அணியை சிரமமின்றி வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
![உச்சகட்ட பரபரப்பில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி..!! பாகிஸ்தான் - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/fDGVYRjVV6JiLCfAJB8eg4-1024x576.jpg)
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ‘சூப்பர் 12’ சுற்றில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் அரையிறுதியை எட்டியது. தென்ஆப்பிரிக்கா தனது கடைசி லீக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்ததால் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் நியூசிலாந்தை 152 ரன்னில் கட்டுப்படுத்திய பாகிஸ்தான் அணி 5 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது. முன்னாள் சேம்பியன்களான இரு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.