டெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா தங்கம் வென்றார். அதனடிப்படையில் இந்தியா நான்காவது தங்கம் வென்றுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இதில் ஏற்கனவே, 48 கிலோ எடை பிரிவில் மங்கோலிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இந்திய வீராங்கனை நீது காங்கஸ் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதையடுத்து, நடைபெற்ற போட்டியில் 81 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சவீதி பூரா, சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கப்பதங்களை வென்றுள்ள நிலையில், இன்று 50 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் (வயது 26), வியட்நாமைச் சேர்ந்த நிகுயென்னை 5-0 என வீழ்த்தினார்.
இதன்மூலம் தொடர்ந்து 2வது ஆண்டாக நிகத் ஜரீன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோமுக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற 2வது இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரி கோம், 6 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில், 75 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை கேட்லின் பார்க்கரை 5-2 புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை லவ்லினா தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.