யமுனையின் நீர்மட்டம் 207 மீட்டரை எட்டுவது மோசமான செய்தி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக வடமேற்கு இந்தியாவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில், யமுனை நீர்மட்டம் 207 மீட்டரை எட்டுவது மோசமான செய்தி என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார். முன்னதாக, டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவான 205.33 மீட்டரைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது. இந்நிலையில் யமுனை நீர்மட்டம் 207.72 மீட்டர் என உள்ளதாக என மத்திய நீர் ஆணையம் கணித்துள்ளது என்றும் இது டெல்லிக்கு நல்ல செய்தி இல்லை என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவலை தெரிவித்த அவர், டெல்லியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத நிலையில், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் ஹரியானா மாநிலம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு தண்ணீர் திறந்து விடுவதால் யமுனையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மத்திய அரசு தலையிட்டு யமுனையில் நீர்மட்டம் மேலும் உயராமல் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்துங்கள் என்று கூறியுள்ளார். முன்னதாக,யமுனா நதியில் நீர்மட்டம் 206 மீட்டரைக் கடந்தால், ஆற்றின் கரையோரங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தொடங்குவோம் என கூறியிருந்தார். அதன்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.