குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இதற்கிடையே, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாமை நடத்தி வருகின்றன.
அந்தவகையில், முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், உரிமைத்தொகை பெறாத பெண்களுக்கு இலவசமாக மேல்முறையீடு விண்ணப்பம் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மற்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.