சமையலில் தக்காளியை, தன்னிடம் கேட்காமல் கணவன் சேர்த்ததால் கோபம் அடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
சமீப நாட்களாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.140-ஐ தாண்டி உள்ளது. ஏழை மக்கள், தங்களது வருமானத்தில் பாதியை தக்காளிக்கே செலவு செய்ய வேண்டிய உள்ளதால், அவர்கள் தக்காளியை சமையலில் சேர்த்துவதை குறைத்து வருகின்றனர். ஓட்டல்கள், உணவகங்கள், உணவு தயாரிப்பாளர்களை பதம் பார்த்துள்ளது. இந்நிலையில் ம.பி.,யில் சமையலில் தக்காளியை சேர்த்ததற்காக மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஷதோல் மாவட்டத்தில் வசிப்பவர் சந்தீப் பர்மன். இவரது மனைவி ஆர்த்தி பர்மன். இவர்களுக்கு குழந்தை உள்ளது. சமீபத்தில் சமையல் செய்த சந்தீப் பர்மன், 2 தக்காளியை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் மனைவியிடம் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால், கோபமடைந்த ஆர்த்தி சண்டை போட்டுள்ளார். பிறகு குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை வெளியேறினார். இதனால், விரக்தியடைந்த சந்தீப் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போட்டோ கொடுத்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆர்த்தி கணவனுடன் சண்டையிட்டு, அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரையும் மொபைல் போனில் பேச வைத்து சமரசம் செய்துள்ளோம். அவர் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என்று கூறுகின்றனர்.