சமீப காலமாக மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. முதலில் வயதானவர்கள் மட்டுமே ஏற்பட்ட இந்த மாரடைப்பு தற்போது வயது வரம்பு இன்று சிறுவர்கள், வாலிபர்கள் என பலருக்கு ஏற்படுகிறது. குறிப்பாக வாலிபர்கள் பலர் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். அந்த வகையில் தற்போது 19 வயது வாலிபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் வினித் குன்வாரியா. 19 வயதான வினித் குன்வாரியா, நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆட ஆசைப்பட்டு, படேல் பூங்கா பகுதியில் கர்பா என்னும் நடனப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். உற்சாகமாக நடன பயிற்சி மேற்க்கொண்டிருந்த இளைஞர் வினித் குன்வாரியா, திடீரென சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக வினித் குன்வாரியாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு இளைஞர் வினித் குன்வாரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் ஜுனாகத் நகரில் இதே போல கர்பா நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த 24 வயதுள்ள இளைஞர் ஒருவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.