தஞ்சை, ஆடுதுறையில் உள்ள கஞ்சமேட்டுத் தெருவைச் வசித்து வருபவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (34). இவர் மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸ் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் இருக்கும் தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும், விக்னேஸ்வரனும் காதலித்துள்ளனர். விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அந்தபெண் நிறுத்தியுள்ளார் ஆனால் விக்னேஸ்வரன் விடுவதாக இல்லை. அந்த பெண்ணை பின்தொடர்ந்ததோடு, அந்த பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து, அபந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து, இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்யக் கூடாது, என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாக கூறுகின்றனர். அதன்பிறகு கடந்த ஜூலை 12-ஆம் தேதி அந்த பெண்ணை கடத்த முயற்சித்தாக கூறப்படுகிறது. அப்போது அவரிடமிருந்து தப்பித்த பெண் இதுபற்றியும் மயிலாடுதுறை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று இரவு ஸ்கார்பியோ கார் மற்றும் சக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்டோர் அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்தியவர்களை தேடி வந்தனர். கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். காவல்துறையினர் சிசிடிவி கேமராவை சோதனை செய்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தகவல் அளித்தனர்.
மயிலாடுதுறையில் கடத்தப்பட்ட பெண் விக்கிரவாண்டி அருகே மீட்கப்பட்டார். கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் மற்றும் அவர் கூட்டாளிகளான சுபாஷ் சந்திர போஸ், விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வகுமார் உட்பட மூன்று பேரை விக்கிரவாண்டி காவல்துறையினர் டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்தனர். பெண்ணை கடத்தியவர்களை மயிலாடுதுறை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது