மருத்துவம் தொடர்பான பொய்யான தகவல்கள் உள்ள வீடியோக்களை நீக்க உள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் நம்பர் ஒன் வீடியோ தளமாக யூடியூப் (YouTube) இருந்து வருகிறது. அதிக அளவு பார்வையாளர்கள் இருப்பதால், நாளுக்கு நாள் விளம்பரங்களின் எண்ணிக்கையும், விளம்பரம் ஓடும் நிமிடங்களையும் யூடியூப் நிறுவனம் அதிகரித்துள்ளது. முன்பு பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த யூடியூப் தளம், தற்போது நம் நாட்டில் லட்சக்கணக்கான யூடியூபர்களுக்கு மாத சம்பளம் வழங்கும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. இதனால் அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
எந்தவொரு விஷயம் குறித்தும், மக்கள் சமூக வலைதளங்களில் தான் தகவல்களை தேடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி, பொய்யான தகவல்களை பரப்பும் சம்பவம் அதிகரித்துள்ளன. இதனை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”யூடியூப் தளத்தில் வெளியிடப்படும் சில மருத்துவக் குறிப்புகள் பொய்யாக உள்ளதாகவும், மக்களை திசை திருப்பும் வகையிலும், ஏமாற்றும் விதத்திலும் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
‘மருத்துவர்களிடம் போக வேண்டாம்… பூண்டை சாப்பிட்டாலே போதும். ‘புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை தேவையில்லை; விட்டமின் சி மாத்திரைகள் சாப்பிட்டால் போதும்’ என பல பொய்யான தகவல்கள் யூடியூப்பில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், உலக சுகாதார நிறுவனம் மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைப்புகளின் நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு எதிராக உள்ள மருத்துவக் குறிப்புகளை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக புற்றுநோய் குறித்த பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, போலியான மற்றும் தவறான தகவல்களை பதிவிட்டுள்ள வீடியோக்கள் நீக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கை உடனடியாக துவக்கப்படுகிறது” என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.