தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தர்விட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறக்கூடிய பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் மாதம் தோறும் 20ஆம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும். அதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட பின் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், 45 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்கப்படாததால் சனிக்கிழமை போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்ப்பித்து சம்பளம் வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் புதிய இடங்களில் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான நிதி பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததால், ஊதியம் கிடைப்பதில் மட்டும் தாமதம் ஏற்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.