குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானம் வீடுகளின் மேல் விழுந்ததால் வீடுகளில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. விமானம் பற்றி எரியும் இடத்திற்கும் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 240 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் விமானம் என்றும் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்டு சற்று நேரத்திலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே முழுமையான விவரங்கள் வெளியாகும்.
பலி எண்ணிக்கை குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மக்கள் அடர்த்தியான பகுதியில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீட்பு பணிகளில் உதவி செய்து வருகின்றனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து காயமடைந்த பயணிகள் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.