சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நேரு நகரில், தனது அண்ணனை தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரு நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமிக்கு, சூர்யா (27) மற்றும் சிவசுதன் (21) என இரு மகன்கள் உள்ளனர். சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், சிவசுதன் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் வேலை முடிந்து ஒரே வீட்டில் வழக்கம்போல் தூங்கியுள்ளனர்.
மறுநாள் சூர்யா ரத்த வெள்ளத்தில் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தலைமறைவாக இருந்த சிவசுதனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சிவசுதன், தனது அண்ணன் சூர்யா தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும், பலமுறை கண்டித்தும் அவர்கள் கேட்காததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிவசுதனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற திடுக்கிடும் உண்மை தெரியவந்தது.
அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கூறுகையில், சிவசுதனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிவசுதனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே இந்தச் சம்பவத்தின் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : அடுத்த பேரிடி..!! அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியன்..!! எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!!