சென்னை மணலி – அரியலூர் சாலை சந்திப்பில், சாலையோரம் மழைநீர் கால்வாய் உள்ளது. அங்கு எரிந்த நிலையில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஆய்வு மேற்கொண்ட பிறகு, உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்த, மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்த மூதாட்டி மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்த வடிவாம்பாள் (73) என்பது தெரியவந்தது. இவரது கணவர் ராஜமாணிக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசிப்பதால், வடிவாம்பாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது. மூதாட்டி ஆடைகள் கலையப்பட்டு கிடந்ததாகவும், நாக்கு கடித்த நிலையில் இருப்பதால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.