பெங்களூரு கோரமங்களா உள்விளையாட்டு அரங்கில் கடந்த பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற பெண்களுக்கான நட்சத்திர கிரிக்கெட் தொடர், தற்போது ஒரு கிரிமினல் வழக்காக உருவெடுத்துள்ளது. 10 அணிகள், நூற்றுக்கணக்கான திரைத்துறை மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் என கோலாகலமாக நடந்த இத்தொடரில், ‘ஷராவதி சக்திஸ்’ அணி வெற்றிவாகை சூடியது. ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால், ஒரு பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகைக்கு நேர்ந்த கொடுமை ஒட்டுமொத்தப் பெண் கலைஞர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
போட்டியின் இரண்டாம் நாளான பிப்ரவரி 7ஆம் தேதியன்று, 32 வயதான அந்தப் பிரபல நடிகை மைதானத்தின் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், நடிகைக்கு தெரியாமல் அவரது அந்தரங்கத் தருணங்களை செல்போனில் ரகசியமாகப் படம்பிடித்துள்ளார். இத்துடன் நில்லாமல், அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் வாயிலாக நடிகையின் தோழிக்கு அனுப்பி வைத்துள்ளார். அது நடிகையின் கணக்கு என தவறாக கருதிய அந்த நபர், அங்கிருந்தே தனது மிரட்டல் நாடகத்தை தொடங்கியுள்ளார்.
“உங்களுடைய இன்னும் பல வீடியோக்கள் எங்களிடம் உள்ளன. நாங்கள் கேட்கும் பெரும் தொகையை தர வேண்டும் அல்லது எங்களுடன் வீடியோ காலில் பேச வேண்டும். தவறினால் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் கசியவிடுவோம்” என அந்த நபர் மிரட்டியுள்ளார். இந்த ‘ப்ளாக்மெயில்’ செய்திகளால் நிலைகுலைந்து போன நடிகை, மன உளைச்சலுக்கு ஆளானாலும் பிப்ரவரி 13ஆம் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீஸாரிடம் முறையான புகார் அளித்தார்.
ஆதாரமாகத் தனக்கு வந்த மிரட்டல் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள பெங்களூரு போலீஸார், குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர். அந்த நபர் மைதானத்தின் தற்காலிக ஊழியரா அல்லது வெளியிலிருந்து வந்த ஊடுருவலா என்ற கோணத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Read More : “என்ன செய்தாலும் வேலைக்கு ஆகல”..!! அரசியலில் இருந்து ஒதுங்கும் ராமதாஸ்..? அதிர்ச்சியில் பாமகவினர்..!!



