குளிர்காலம் வரும்போது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது வேர்க்கடலை.
இது மலிவானதுடன், நார்ச்சத்து, தாவர அடிப்படையிலான புரதம், மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் சக்தியை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
ஆனால் சமீபத்திய ஒரு ஆய்வு, வேர்க்கடலை உபயோகமும் கல்லீரல் சேதத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தி உள்ளது.
‘அஃப்லாடாக்சின்’ என்ற நச்சுப் பொருள் என்ன?
சில சமயங்களில் வேர்க்கடலைகள் “அஃப்லாடாக்சின்” (Aflatoxin) எனப்படும் நச்சுப் பொருளால் பாதிக்கப்படலாம். இது தவறான சேமிப்பு அல்லது உலர்த்தும் முறைகளில் பூஞ்சை (fungus) உருவாகும்போது தோன்றுகிறது. இத்தகைய நச்சுப் பொருட்கள் கல்லீரல் சீரோசிஸ் (Liver Cirrhosis) மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடும்.
அஃப்லாடாக்சின் உருவாகும் விதம்
அஃப்லாடாக்சின் என்பது இரண்டு வகை பூஞ்சைகளால் (molds) உற்பத்தியாகும்:
Aspergillus flavus மற்றும் Aspergillus parasiticus. இவை பொதுவாக மக்காச்சோளம், வேர்க்கடலை, மரக் கடலை வகைகள் போன்ற பயிர்களில் வளரும்.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
அஃப்லாடாக்சினுக்கு ஆறு வகைகள் உள்ளன — B1, B2, G1, G2, M1, M2.
அவற்றில் Aflatoxin B1 மிகவும் ஆபத்தானது; இது கல்லீரலை நேரடியாக தாக்கி,
கடுமையான விஷத்தன்மை (acute poisoning), மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்று வலி, கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றை உண்டாக்கும்.
குறைந்த அளவு அஃப்லாடாக்சின் கூட ஆபத்து!
அஃப்லாடக்சின் குறைந்த அளவில் இருந்தால் கூட பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.. குழந்தைகளில் வளர்ச்சி மந்தம், நோய் எதிர்ப்பு திறன் குறைவு, மெட்டபாலிசம் பாதிப்பு ஆகியவை ஏற்படும். மேலும், கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 2.5 மடங்கு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் உணவுப் பஞ்சம் (malnutrition) இருப்பதாலும், இந்நச்சு உணவுகளில் தேங்கும்போது, பாதிப்பு மேலும் கடுமையாகிறது.
ஏன் வேர்க்கடலைகள் பூஞ்சைக்கு ஆளாகும்?
வேர்க்கடலைகள் மண்ணுக்குள் வளர்வதால், அவை ஈரப்பதம், வெப்பநிலை, மற்றும் சேமிப்பு சூழ்நிலை ஆகியவற்றால் பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். வேர்க்கடலைகள் அறுவடை செய்யப்பட்ட பின், முழுமையாக உலர்க்கப்படாமல் இருந்தால் அல்லது ஈரப்பதமான இடங்களில் சேமிக்கப்பட்டால், அவை பூஞ்சையால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும். மேலும் வானிலை மாற்றம் (climate change) காரணமாக ஏற்படும் வறட்சி வேர்க்கடலை தோல்களில் பிளவுகளை உண்டாக்கி,
அதன் வழியாக பூஞ்சை விதைகள் உள்ளே நுழைந்து நச்சை உருவாக்கும்.
அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
வேர்க்கடலை வறுத்ததும் உப்பிட்டு சாப்பிட்டதும் சுவையாக இருக்கும்.
ஆனால் அதிக அளவில் சாப்பிடுவது சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்:
வயிற்றுப் புடைசல், வாயு, செரிமான சிக்கல்கள்
அதிக கலோரி காரணமாக உடல் எடை அதிகரிப்பு
சிலருக்கு வேர்க்கடலை அலர்ஜி ஏற்பட்டு, கடுமையான உடல் விளைவுகள்
உப்பு நிறைந்த வேர்க்கடலை அதிகமாக எடுத்தால் ரத்த அழுத்தம் உயரும்
பூஞ்சை தாக்கிய (moldy) வேர்க்கடலை சாப்பிட்டால் நச்சு சேர்க்கை (toxin accumulation) ஏற்படும்
நிபுணர் பரிந்துரை
எப்போதும் புதிய, நன்றாக உலர்த்தப்பட்ட வேர்க்கடலைகளை மட்டுமே வாங்கவும்
ஈரமான அல்லது கசப்பான நாற்றம் வரும் கடலைகளை தவிர்க்கவும்
காற்றோட்டமுள்ள உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்
குழந்தைகளுக்கும், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் அளவுக்கு மீறி கொடுக்க வேண்டாம்
வேர்க்கடலை நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான உணவு — ஆனால் சரியான சேமிப்பு, சுத்தம், மற்றும் அளவு முக்கியம். இல்லையெனில், அந்த “நன்மை நிறைந்த வேர்க்கடலை” கூட உங்கள் கல்லீரலை பாதிக்கக் கூடியது!



