பாரபட்சமின்றி தமிழர்களின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்தது நாயகன் படத்தில் தான். இந்நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதற்கிடையே, இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ப்ரமோஷனுக்காக வெளிநாடு செல்வதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று அதிகாலை (மே 31) சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக கூட்டணியில் உள்ள மநீம கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “நமது குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தில் குரல் ஒலிக்க வேண்டும். அந்த குரல் பாரபட்சம் இல்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியான தவெக குறித்த கேள்விக்கு, ”நானும் புதிய கட்சியை சேர்ந்தவன் தான். எனவே, புதிய கட்சிகளை விமர்சிக்க இயலாது” என பதிலளித்து சென்றார்.